காற்றாடி (Wind Mill) விற்பனை வியாபார நோக்கத்துடன் ஹென்றி டியூனாண்ட் அவர்கள் 1859.ம் ஆண்டு பிரெஞ்சு மன்னர் மூன்றாம் நெப்போலியன் அவர்களை சந்திக்க இத்தாலி சென்றார். இந்த நேரத்தில், வடக்கு இத்தாலியின் லோம்பார்டி சமவெளியில் ஜூன் 24, 1859 அன்று நடந்த சோல்ஃபெரினோ போரை அவர் நேரில் கண்டார். போரில், பிரான்ஸ் (France) மற்றும் சார்டினியா (Sardinia) வீரர்களை, ஆஸ்திரியா (Austria) நாட்டு வீரர்களை எதிர்த்துப் போரிட்டனர்.
அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை போர் நீடித்தது. 3 லட்சம் வீரர்கள் 10 மைல் தூரத்திற்கு ஒருவரையொருவர் எதிர்த்து நின்று போரிட்டனர். மறுநாள் காலையில் ஒரு கோரமான காட்சி காணப்பட்டது. ஒரே நாளில், 40,000 வீரர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர் மற்றும் காணாமல் போயினர். காயமடைந்த வீரர்கள் போதுமான மருத்துவ உதவியின்றி, குடிக்க தண்ணீர் மற்றும் உணவு ஏதுமின்றி கதறிக் கொண்டிருந்தனர்.
ஹென்றி டியூனாண்ட் அவர்கள் உடனடியாக அருகிலுள்ள பகுதிக்குச் சென்று காயமடைந்த வீரர்களுக்கு உதவ தன்னார்வலர்களையும், மருத்துவர்களையும் ஒன்று திரட்டினார். வீரர்கள் அவரை வெள்ளை மாமனிதர் (The Gentleman in White) என்று அழைத்தனர். உதவிக்கு வந்த தன்னார்வலர்கள் முதலுதவியில் முறையாகப் பயிற்சி இல்லாதவர்களாக இருந்தனர், அவர்கள் காயம் பட்ட தங்கள் சொந்த நாட்டு (பிரெஞ்சு) வீரர்களுக்கு மட்டுமே உதவினார்கள்.
ஹென்றி டியூனாண்ட் அவர்கள் எவ்வித பாகுபாடுமின்றி போரில் காயம் பட்ட அணைத்து வீரர்களுக்கும் உதவினார். இச்செயலை கண்ட ஒரு பெண்மணி "ஐயோ அவன் விரோதி! (He is Enemy) என்றார். அதற்கு ஹென்றி அவர்கள் "விரோதியும் மனிதன் தான்" (He is a Man) என்று பதிலுரைத்தார். அவர் சொன்ன வார்த்தைகள் அனைவரது உள்ளத்தையும் நெகிழ்ச்சியுறச் செய்தது.